Tuesday, October 25, 2011

நிலா இருள்

http://iravinpunnagai.blogspot.in/2011/10/blog-post_26.html
பகலெல்லாம் திரிந்த சூரியனோ மேற்கில் மறைந்துவிட்டான்,

தொடு வானத்தில் தெரிந்த மதியோ உச்சிக்கும் வந்துவிட்டான்...

நள்ளிரவு பேச்செல்லாம் ஓய்ந்து விட்டது,

கோட்டானின் சத்தமும் அடங்கி விட்டது...

உலகமே சுகமாகத் தூங்குகிறது,

என்னைத் தவிர...

கால்கள் ஓய்வைத் தேடுகிறது,

மனம் மறுப்பதனால் திரும்ப திரும்ப நடந்துகொண்டே இருக்கிறேன்

மேகம் மறைத்த நிலா இருளில்,

நீ மறந்து போன நம் நேசத்தை எண்ணி...

Friday, October 7, 2011

எட்டாக் கனி


http://iravinpunnagai.blogspot.in/2011/10/blog-post_07.html 
காதல் வராத மனிதனென்று யாரும்
பிறப்பதில்லை இப் பூவுலகில்.
அது பிறக்கும் போதே
விதைக்கப் பட்டும் விடுகிறது.
மனதினுள் புகுந்து காதலை
பூக்கச் செய்யும் மழைத் துளிக்காகத்தான்
காத்திருக்கிறது எல்லா மனமும்.
கடந்து செல்லும் மேகங்களை
எல்லாம் உற்று நோக்கியபடி...
சிலருக்கு எளிதில் பூத்து விடுகிறது
பலருக்கு அது எளிதில் பூப்பதில்லை
எட்டாக்கனியாகவே உள்ளது...
காத்திருப்போம்
எட்டாக் கணியில் தானே சுவை அதிகம்......
தங்கள் வருகைக்கு நன்றி.!!!

Wednesday, October 5, 2011

பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனையொத்த நட்பு...

ஆயுத பூஜை திருவுவிழாவிற்காக ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை, அதிலும்  இந்த முறை பல்கலைக்கழகத்தில் எந்த வீட்டு வேலையும் கொடுக்காததால் மிகுந்த  மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நான், சற்று விரக்தியுடன் ஊருக்கு வந்தேன்.  காலையிலிருந்து அனைத்து
வேலைகளும் சிறிது மந்தமாகவே இருந்தது. அதிலும் இன்று காலையில் நண்பள் சரியாக பெசாததனால் பிடிப்பு இன்னும் குறைந்திருந்தது. இவள் பேசும்போது எதோ புதிதாக பழகும் நபரைப் போல் பேசினாள். இதனால் எனக்கு கோபமும், விரக்தியும் அதிகமாயிற்றே தவிர சிறிதளவும் குறையவில்லை. இவள் கடந்த சில வாரமாகவே இப்படித்தான் இருக்கிறாள், அதனால் நட்பு என்றாலே காவியங்கள், இலக்கியங்களில் தான் உண்மை என்று நினைத்திருந்தேன்.


இந்நிலையில் மாலை நேரத்தில் பாடல் கேட்டுக் கொண்டே ஓடையில் காலர நடந்துவிட்டு, மோட்டார் பம்பில் குளித்துவிட்டு வீடு வந்து கொண்டிருந்தேன். அப்போது பங்காளியுடன் சிறிது நேரம் உரையாடினேன், அப்போது அவர் எனக்கு ஒரு திடுக்கிடும் தகவலைக் கூறினார்.


எங்கள் கிராமம் சளையக்குறிச்சி. இங்கு காலனி தெருவில் வசிப்பவர் T.K என்ற தா.கருப்புசாமி. இவர் எனக்கு ஒரு வருடம் மூத்தவர், எனக்கு சிறிது பழக்கம். பள்ளியில் ஒன்றாக படித்துக் கொண்டிருந்தோம். நான் ஏழாவது படித்தபோது அவர் எட்டாவது படித்தார். தற்போது பெரம்பலூரில் இளங்கலைப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார், இந்நிலையில் இவர் காதலித்த பெண் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார், அவள் இறந்த பிறகு இவர் சற்று விரக்தியாகவும், வாழ்க்கையில் பிடிப்பு அற்றும் காணப் பட்டார்.


இப்படிப் பட்ட சூழ்நிலையில் இவர் இன்று காலையில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். அதுவும் நஞ்சி(மருந்து)னை மதுவில் கலந்து வலி தெரியாமல் இறந்து போனான் இன்று. இவனது பிரிவினைத் தாங்க முடியாமல் இவனது நண்பன் ரவி என்பவன் இன்று நாணல் கயிறு இட்டுக் (நானுக்கிட்டான்-கிராமத்து வழக்கில்) கொண்டான். இவன் இறந்திருந்தாலும் பிரச்சனை இருந்திருக்காது, இவனது குடும்பம் சில நாள் அழுதுவிட்டு பிறகு பிழைப்பை பார்த்திருக்கும். அனால் இப்போது நிலைமை வேறு இந்த ரவி இறக்கவில்லை. இவன் திருச்சி K.M.C மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளான். பிழைப்பது கேள்விக்குறிதான் என்று மருத்துவமனையில் கூறிவிட்டனர். இவனது குடும்பத்திற்கு தற்போது சுமார் 2 இலட்சம் வீண் செலவு. இந்த பணத்தை ஈடு செய்வதே இவன் குடும்பத்திற்கு பல வருடங்கள் ஆகு. இந்த சரசுவதி பூசைதினத்தில் இந்த இருவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் மாபெரும் சோகம்...

இந்த சம்பவம் எனக்கு நிறைய கேள்விகளை எனக்கு எழுப்புகிறது:

௧.நண்பர்களுக்கு சிறிது நேரம் கூட நேரம் ஒதுக்க யோசிக்கும் இந்த வேகமான காலகட்டத்தில் நண்பன் பிரிவினை ஏற்றுக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறான் என்றால் அவனது நட்பு எவ்வளவு பெரியது.

௨.இவனது நட்பு மதிக்கத் தக்கது. அதே சமயம் இவன் இந்த முடிவினை அவசர துக்கத்தில் எடுத்துவிட்டனோ என்றும் தோன்றுகிறது? சிறிது அவன் குடும்பத்தைப் பற்றியும் யோசித்திருந்திருக்கலாம். அவசரப்பட்டுவிட்டான்...

௩.தனது நண்பனுக்காக தன் இன்னுயிரை, அவனது உயிரைக் காப்பாற்ற இவன் இழந்திருந்தால் இவனைப் பாராட்டலாம்.

இந்த செய்தி எனக்கு இன்னும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இவர்களின் நட்புடன் எனது நண்பர்களின் நட்பினை ஒப்பிடும் போது எம்மாத்திரம் என்று தோன்றுகிறது. நான் நண்பர்கள் என்று நினைக்கும் அனைவரிடமும் உண்மையாகத் தான் நடந்திருக்கிறேன். வாங்கித் தந்தாள்தான் நண்பன் என்று அங்கீகாரம் கிடைக்கும் இந்த நவீன நட்புக் கோட்பாட்டில் இந்த பிசிராந்தையார், கொப்பெரும் சோழன், போத்தையார் நட்பு, மற்றும் இந்த இருவரின் நட்பும் என்னை வியக்க வைக்கிறது.


- புறநானூறு (67)

அன்னச் சேவல் அன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாங் கையறுபு இனையக்
குமரி அம் பெரும்துறை அயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடி உறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
நண்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.

பொருள்:
புலவர் பிசிராந்தையார் கொப்பெரும் சோழனைப் பார்க்காமலே அவர் மீது பெரும் நட்பும், மரியாதையும் கொண்டார். மாமன்னன் சோழனது மகன்கள் தந்தை மீது நட்பும், பாசமும் கொள்ளாமல், ஆட்சியைப் பிடிப்பதிலேயே கவனமாக இருந்தனர். இதனைப் பார்த்து மனம் நொந்து போன சோழன், வடமலை சென்று வடக்கிருக்க முடிவு செய்தார். (வடக்கிருத்தல் என்றால் நம் தமிழ் மன்னர்கள் போரில் புற முதுகிட்டாலோ, அல்லது தொற்றாலோ, வடக்கு நோக்கி உண்ணாமல் இருந்து உயிர் விடுவர்). சோழனுடன் அவரது பிரதம அமைச்சருமான போத்தியார் வடக்கிருக்க புறப்பட்டார். இதனைக் கேள்விப் பட்ட புலவர் பிசிராந்தையார் அவருடன் வடக்கிருக்க முடிவு செய்து பயணப்பட்டார். இதற்க்கிடையில் அமைச்சரின் மனைவி கர்ப்பமாய் இருப்பது சோழனுக்கு தெரிய வந்ததால், நீ மகப்பேறு காலத்தில் நீ உன் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார். பிறகு மன்னர் மற்றும் பிசிராந்தையார் இருவரும் வடக்கிருந்து உயிர் விட்டனர். காலம் சென்றது. அமைச்சருக்கு ஒரு அழகான ஆண் குழைந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் போத்தியாரும் நண்பரின் துயர் தாங்காமல் வடக்கிருந்து உயிர் விட்டார்...

இதுதான் உண்மையான நட்பு. உலகிலேயே நிட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு.


நட்பு, தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும் நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இவர்கள் தான் உண்மையான நண்பர்கள்.

பேசுவதற்கே நேரம் இல்லை, மற்றும் பல சாக்குகளைக் கூறும் இந்த நவீன யுகத்தில் இவர்கள் எனது அணுகுமுறையை மறு பரிசீலனை செய்ய வைத்து விட்டனர்.